மாமரமும் மாமழையும்!!!

 அலுவலகத்திற்குப் பின்னால் ஒரு பெரிய மாமரம் இருக்கிறது. பின்னால் என்றால் பின்னாலுள்ள கட்டடத்தில் வேரூன்றி இருக்கும் மரம். எங்கள் அலுவலகக் கட்டடம், தரைத்தளம் தவிர்த்து மூன்று மாடிகள். அந்த மூன்று மாடிகளையும் கடந்து ஓங்கி உயர்ந்து வளர்ந்திருக்கும். அந்த மரத்தின் ஒரு பகுதி எங்கள் கட்டடத்தின்மீது சாய்ந்தவாறு இருக்கும். அதில் விளையும் மாங்காய்கள் மிகவும் சுவையாக இருக்கும். சமயங்களில் நாங்கள் மொட்டை மாடிக்குச் சென்று கைக்கு எட்டும் தொலைவிலுள்ள காய்களைப் பறித்துக்கொள்வோம்.

 

கடந்த வெள்ளியன்று, மொட்டை மாடியில் மழையை வேடிக்கை பார்க்கலாம் என்று சென்றபோதுதான் அந்த மரத்தில் சில மாங்காய்கள் காய்த்துத் தொங்குவதைக் கண்டேன், அதுவும் கைக்கு எட்டும் தொலைவில். ஐந்தாறு காய்கள் தேறின. பறித்துக்கொண்டேன். அவற்றுள் ஒன்றைக் கழுவி, தோல் நீக்கி சாப்பிட்டுப் பார்த்தேன். இனிக்கவும் இல்லை; புளிக்கவும் இல்லை. இது ஏன் இப்படிப்பட்ட சுவையில் இருக்கிறது என்ற குழப்பம் எனக்கு. இருக்கட்டும், இவற்றை எடுத்துச் சென்றால் வீட்டில் அம்மா ஊறுகாய் போட்டுக் கொடுப்பார் என்றெண்ணி எடுத்து வைத்துக்கொண்டேன்.

 

சனிக்கிழமை. காலை முதலே விட்டு விட்டு மழை பெய்துகொண்டிருந்தது. பள்ளியில் கட்டணம் கட்ட வேண்டும். பள்ளி இருக்கும் தெரு முழுவதும் ஆறாகத் தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது. வண்டியை எடுத்துக்கொண்டு சென்று ஓரிரு தெருக்கள் கடந்து நிறுத்திவிட்டு, பாய்ந்தோடும் வெள்ளத்தில் நடந்தபடியே பள்ளிக்குச் சென்று கட்டணத்தைக் கட்டிவிட்டு, மீண்டும் பாய்ந்தோடும் வெள்ளத்தில் நடந்தபடி வண்டிக்கு வந்து வீட்டிற்கு வந்துவிட்டேன். அதன்பிறகு, பெருங்குடி பகுதியில் ஒருவரைத் தேடிச் சென்று, அங்கும் மழைத் தண்ணீரில் கை, கால், வண்டி எல்லாம் நனைந்து, நான் தேடிச் சென்றவரையும் பார்க்க முடியாமல் திரும்பிவிட்டேன். நான் பறித்துச் சென்ற மாங்காய்கள் ஊறுகாயாக மாறியிருந்தன. ஊறுகாய் சாப்பிடுவதில் நான் ராமராஜனைப் போல். தொட்டுக்கொண்டெல்லாம் சாப்பிட மாட்டேன்; அப்படியே அள்ளித் தின்பதுதான்.

 

அன்றிரவு கடுமையான மூட்டுவலி, முதுகுவலி. லேசான காய்ச்சல் வேறு. கால் விரல் நகக் கண்களுக்குள் நுண்ணிய பூச்சி ஊர்வதுபோன்ற உணர்வு. 2015 வெள்ளத்தின்போது வாத்தியார் கணேஷ் பாலாவின் வீட்டிற்குச் சென்று அவருடைய வீட்டை சுத்தம் செய்து கொடுத்த அன்று இதே உணர்வு இருந்தது. அன்று சாக்கடைத் தண்ணீரில் நீண்ட நேரம் உழன்றதால் ஏற்பட்டிருந்தது. பலமுறை சோப், டெட்டால் போட்டுக் கழுவிய பிறகுதான் அது நீங்கியது. ஆனால், இது தெள்ளிய மழைத் தண்ணீர். மாத்திரை போட்டுக்கொண்டேன். மனைவியிடம் காலுக்குத் தைலம் தேய்த்துவிடச் சொன்னேன். தேய்த்துவிட்டார். ஆனால், அவர் தொட்டதன் வலி மூட்டுவலியை விட அதிகமாக இருந்தது. தூங்கிப் போனேன்.

 

ஞாயிறன்று காலையில் எழுந்தபோது சற்றுத் தெளிவாக இருந்தது. மூட்டுவலி பெரிதாக இல்லை; முதுகுவலி முற்றிலும் இல்லை. மதியம் சாப்பிடும்போது அமேசான் பிரைமில் படம் பார்த்தேன். நீண்ட நேரம் உட்கார முடியவில்லை. மீண்டும் காய்ச்சல் அடிப்பதுபோல் இருந்தது. உறங்கிப் போனேன். மாலையில் எழுந்தபோது மீண்டும் மூட்டுவலி. என்னவாக இருக்கும் என்று யோசித்தபோதுதான் புலப்பட்டது. இது மாங்காய் விளையும் பருவம் அல்ல. இந்தப் பருவத்தில் விளையும் மாங்காயை உண்டதால் ஏற்பட்டிருக்கும் வயிற்றுக் கோளாறு. அத்துடன் மழையில் அலைந்ததும் சேர்ந்துகொண்டு வாட்டுகிறது. ஐயோ! அடுத்த நாள் அலுவலகம் போக வேண்டுமே? மருத்துவரைக் காண்பதுதான் நல்லது என்று பட்டது.

 

மருத்துவரிடம் சென்றேன். அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் கொரோனா வைரஸ் நோயைச் சுற்றியே இருந்தன. "இல்லை, டாக்டர். நான் மழையில் நனைஞ்சுட்டேன்; ஜில்லுன்னு மழைத் தண்ணில நடந்தேன்; மாங்கா சாப்பிட்டேன்" என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 'மழையில் நனைஞ்சானாம், மாங்கா தின்னானாம்' என்று மனதுக்குள் திட்டியிருப்பார். நான் சோர்வாக இருப்பதைப் பார்த்து, ஓர் ஊசியைப் போட்டார். இடுப்பில். அதை வேறு அவர் பார்த்துத் தொலைத்துவிட்டார். மூன்று நாட்களுக்கு மாத்திரை கொடுத்திருந்தார். மழையில் வெளியே போகாதே என்று அறிவுரை கூறினார். அப்படிப் போவதாக இருந்தால், காதில் பஞ்சு வைத்துக்கொள்ளச் சொன்னார். அவர் சொல்லும்போது வெளியே மழை பெய்துகொண்டிருந்தது. வீட்டிற்கு வந்ததும் வியர்த்துவிட்டது. ஊசியின் விளைவு. அடுத்த நாள் நிச்சயம் அலுவலகத்திற்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. மாத்திரையை உட்கொண்டுவிட்டு உறங்கிப்போனேன்.

 

அடுத்த நாள், திங்கட்கிழமை. காலை எழுந்திருக்கும்போதே கடுமையான உடல்வலி. ஒவ்வோர் எலும்பும் 'விண் விண்' என்று தெறித்தன. லேசான காய்ச்சலும் இருந்தது. கூடவே இருமலும். எனக்கே சந்தேகம் வந்துவிட்டது. ஒருவேளை, அதுவாக இருக்குமோ? அலுவலகத்திற்கு விடுப்பு வேண்டுமென்று அலுவலக வாட்சப் குழுவில் செய்தி அனுப்பினேன். அங்குள்ளவர்களும் நலம் விசாரித்தார்கள். சிலர் குழுவிலேயே; சிலர் தனிப்பட்ட முறையில்; சிலர் தொலைபேசி அழைப்பு வாயிலாக. அவர்கள் கேட்டது எனக்கு இன்னும் சந்தேகத்தை அதிகரிக்கச் செய்தது. பார்க்கலாம், சரியாகவில்லை என்றால் அடுத்த நாள் நாமே நேராகச் சென்று பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

 

செவ்வாயன்று காலையில் எழுந்தபோது லேசான காய்ச்சல் இருந்தது. லேசான இருமலும் இருந்தது. அலுவலகம் செல்வதற்கு மனம் வரவில்லை. சரியல்ல. வேளச்சேரி ஆர்த்தி ஸ்கேன்ஸ்-க்குச் சென்று என் விவரங்களைக் கூறி, கட்டணத்தைக் கட்டினேன். என் ஆதார் அட்டையின் நகல் கேட்டார்கள். இல்லை. மெயிலில் எப்போதோ யாருக்கோ அனுப்பியிருந்தேன். தேடிப் பிடித்து அதை அவர்களுக்கு அனுப்பிவைத்தேன். பரிசோதனை விவரங்களை அரசாங்கத்திற்கு அனுப்புவார்களாம். பரிசோதனை செய்பவர் என்னிடம் கேட்டார், "ஏன் சார்? கொரோனா வந்தவங்க கூட நீங்க இருந்தீங்களா? ஏன் செக் பண்றீங்க?" என்றார். "இல்லை சார். நான் ஆபிஸ் போகணும். அங்க எல்லாருக்கும் என்மேல டவுட் வந்திருச்சு. பிரெக்னன்ட் ஒய்ஃப், சின்னக் குழந்தைக, ரொம்ப வயசானவங்க எல்லாம் இருக்காங்க. ஒருவேளை எனக்கு இருந்து, என்கிட்டருந்து வாங்கிட்டுப் போய், அவங்க குடும்பத்தில யாருக்காவது குடுத்திட்டா? அந்த பயம்தான் சார். நெகட்டிவ்னு தெரிஞ்சிட்டா அவங்களும் நிம்மதியா என்கூடப் பேசுவாங்கல்ல?" என்றேன். "ஆமாமா, சரிதான்" என்றவர் மூக்குக்குள் குச்சியை விட்டுக் குத்தி எடுத்தார். சிறு வயதில் நண்பர்களுடன் சண்டை போட்டு சில்லு மூக்கை உடைத்துக்கொண்டிருப்போம். அப்போது ஏற்பட்ட வலியின் ஒருபகுதியை உணர முடிந்தது. தொண்டையில் இருந்து எடுத்ததில் வலி இருக்கவில்லை. வாந்தியோ தும்மலோ வந்துவிடுமோ என்று நினைத்திருந்தேன். வரவில்லை.

 

அன்றிரவே பரிசோதனை முடிவுகள் வந்துவிட்டன. "Detected" என்றிருந்தது. ஆமாம், எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது. மாங்காய் மீதும், மழையின் மீதும் கொண்டிருந்த காரணம் பொய்யென்று தெளிவானது.

சென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது?

நான் கடந்த பிப்ரவரி மாதம் முதல் மெட்ரோவில் பயணித்து வருகிறேன். நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை கடந்த ஜூன் வரை பயணித்திருக்கிறேன். அதற்குப் பிறகு, என் அலுவலகம் நந்தனத்திற்கு மாறிவிட்டதால் தற்போது வரை நந்தனம் வரை பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
மெட்ரோ பயண அட்டையில் இரண்டு வகை உள்ளது. ஒன்று டிராவல் அட்டை, மற்றொன்று டிரிப் அட்டை. நான் இரண்டு அட்டைகளையும் வைத்திருக்கிறேன். இவற்றில் டிராவல் அட்டை என்பது சென்னை மெட்ரோவில் எங்கிருந்தும் எங்கு வரையிலும் பயணிக்கக்கூடியது. டிரிப் அட்டை என்பது குறிப்பிட்ட ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் வரை மட்டுமே பயணிக்கக்கூடிய அளவிலான அட்டை. (முந்தைய நிலையங்களிலும் இறங்கிக்கொள்ளலாம்) டிரிப் அட்டைக்கு 20 சதவீதம் தள்ளுபடியும், டிராவல் அட்டைக்கு 10 சதவீதம் தள்ளுபடியும் கிடைக்கும். உதாரணமாக, நங்கநல்லூர் சாலை இருப்பூர்தி நிலையத்திலிருந்து ஆயிரம் விளக்கு நிலையம் வரை பயணக் கட்டணம் ரூ.40. எந்த அட்டையும் இல்லாத ஒருவர் 40 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், டிராவல் அட்டை வைத்திருக்கும் ஒருவர் 36 ரூபாய் செலுத்தினால் போதுமானது. டிரிப் அட்டை வைத்திருக்கும் ஒருவர் 32 ரூபாய் செலுத்தினால் போதுமானது.
பணம் செலுத்தும் முறை: பணத்தை ரொக்கமாகவோ, கிரெடிட் அல்லது டெபிட் அட்டை மூலமாகவோ செலுத்தலாம். டிராவல் அட்டைக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்தலாம். ஆனால், டிரிப் அட்டைக்கு நாம் எத்தனை டிரிப் என்று கணக்கிட்டு அந்தத் தொகையைத்தான் செலுத்த வேண்டும். உதாரணமாக, என் டிரிப் அட்டையில் வாரம் 320 ரூபாய் (10 டிரிப்) செலுத்துவேன். (காலை அலுவலகம் செல்வதற்கு ஒன்றும், மாலை திரும்ப வருவதற்கு ஒன்றும் ஆக மொத்தம் வாரத்திற்கு 10 டிரிப்). 500 ரூபாயைக் கொடுத்துவிட்டு, டிரிப் அட்டைக்கு 320 போக மீதம் உள்ள 180 ரூபாயை டிராவல் அட்டைக்கு செலுத்திவிடுவேன்.
பணம் கழிவது எப்படி? நுழைவாயிலில் எந்திரத்தாலான தடுப்பு போடப்பட்டிருக்கும். அந்த எந்திரத்தில் அட்டையை வைப்பதற்கான இடம் ஒன்றும் இருக்கும். அந்த இடத்தில் நமது அட்டையை வைத்தால், நாம் உள்ளே செல்வது உறுதி செய்யப்பட்டு, தடுப்பு திறக்கும். டிராவல் அட்டை என்றால், எவ்வளவு தொகை இருக்கிறது என்பதையும், டிரிப் அட்டை என்றால், எத்தனை டிரிப் மீதம் இருக்கிறது என்பதையும் அங்கிருக்கும் திரை காட்டும். நாம் சென்று சேர வேண்டிய நிலையம் வந்து அடைந்ததும், வெளியேறும் வழியில் மீண்டும் நாம் அட்டையை வைக்க வேண்டும். அப்போது அங்கிருக்கும் திரையில் பணம் கழிந்ததைக் காட்டும். டிராவல் அட்டையாக இருந்தால் 36 ரூபாய் கழிந்து மீதம் உள்ள தொகையைக் காட்டும். அதே நேரத்தில், தடுப்புக் கதவும் திறந்துவிடும். டிரிப் அட்டையாக இருப்பின், மீதம் உள்ள டிரிப் எண்ணிக்கையைக் காட்டும். நான் எதற்காக 180 ரூபாயை டிராவல் அட்டைக்கு செலுத்துகிறேன் என்ற கேள்வி எழலாம். முன்பெல்லாம் வண்டி நிறுத்துவதற்குப் பணம் வாங்கிக்கொண்டிருந்தார்கள். எனக்கு 15 ரூபாய் வரும். இப்போது பணம் வாங்குவதை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக டிராவல் அட்டையை வாங்கத் தொடங்கிவிட்டார்கள். அங்குள்ள பணியாளர்களிடம் கிரெடிக் கார்டு தேய்க்கும் எந்திரம் போன்ற எந்திரம் ஒன்று இருக்கும். காலையில் உள்ளே நுழையும்போது அட்டையை அதில் வைத்துவிட, அது நேரத்தைக் குறித்துக்கொள்ளும். மாலையில் வண்டியை எடுத்துவிட்டு வெளியேறும்போது மீண்டும் அட்டையை வைத்தால் அதில் பணம் கழிந்துவிடும்.
இப்போது இன்னொரு வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் டிராவல் அட்டைக்குப் பாதித் தொகை மட்டுமே வசூலிக்கிறார்கள். அதுபோன்ற நாட்களில் எனக்கு டிராவல் அட்டையில் பயணம் செய்வது லாபகரமாக இருக்கிறது.
கோராவில் கேட்கப்பட்ட "சென்னை மெட்ரோ பயண அட்டையை எப்படிப் பயன்படுத்துவது?" என்ற கேள்விக்கு என் பதில்.

செல்வி

செல்வி

========

மனைவிக்கு ஒரு கெட்ட(!?) பழக்கம். எங்காவது புதிய இடங்களுக்குச் சென்றாலோ, விருந்து, விழாக்களுக்குச் சென்றாலோ அங்கிருப்பவர்கள் சிலரை நட்பாக்கிக்கொள்வார். அவர் ஆக்கிக்கொள்கிறாரோ இல்லையோ, மற்றவர்கள் ஆகிவிடுவார்கள். ஓரிடத்திற்குத் தனியாகச் செல்லும் அவர், அங்கிருந்து திரும்ப வரும்போது தோழியர் புடைசூழ வருவார். அது மட்டுமல்ல, அந்த நட்பு நீண்ட நாள் நீடித்திருக்கும் என்பது வரலாறு.

சான்றிதழ் வாங்குவதற்காக இந்தி பிரச்சார சபைக்குச் சென்றவர், தான் படிக்கும் நிலையில் இருக்கும் சில பெண்களுடன் பழகி, வாட்ஸப் குழு உருவாக்கிக்கொண்டு படிப்பு குறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வதும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்வதும், அவ்வப்போது அரட்டை அடித்துக்கொள்வதும் உண்டு. திருமண விழாக்களுக்குச் சென்றால் கேட்கவே வேண்டாம்.

எங்காவது புதிய இடத்திற்குச் சென்று வந்திருந்தால் நான் கேலியாகக் கேட்பேன், “எத்தனை பேருக்கு நம்பர் கொடுத்தே? எத்தனை பேர் கிட்ட நம்பர் வாங்கினே?” என்று. அவரும் வழிந்துகொண்டே எத்தனை என்பதைக் கூறிவிடுவார். ஆனாலும், ஆள் உஷார்தான். உண்மையான நட்புடன், அன்புடன் பழகுபவர்களை அடையாளம் கண்டுகொள்வதில் கில்லாடி. அப்படியும் ஏமாற்றும் எண்ணத்துடன் பழகுபவர்களை அடையாளம் கண்டுவிட்டால் போதும், “இப்போ என்ன ஆச்சு? காசு பணமா போச்சு? அன்புதானே? திரும்பக் கிடைக்கும்” என்று சொல்வார்.

சரி. இதற்கும் தலைப்பிற்கும் என்ன தொடர்பு என்றுதானே நினைக்கிறீர்கள்? ஆண்களில் சரவணன், செந்தில் என்பதைப் போல் பெண்களில் செல்வி, பிரியா என்ற பெயர்கள் மிகவும் அதிக அளவில் இருக்கும். என் மனைவியின் ஃபோனில் கூட Selvi Akka, Selvi FB, Selvi (Pavithra Amma), Selvi Velachery என்று பல பெயர்களில் செல்வி என்ற பெயர் இடம் பெற்றிருக்கும். மேற்கூறியவை எனக்கு நினைவில் இருப்பவை மட்டுமே. இன்னும் எத்தனை செல்விகள் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

வீட்டிற்கு அருகே “Drunken Monkey” என்ற கடை ஒன்றைத் திறந்திருக்கிறார்கள். அந்தக் கடைக்கு இரண்டு நாட்களுக்கு முன் மனைவியும், தங்கை மகளும் சென்றிருக்கிறார்கள். அங்கு மில்க் ஷேக் குடித்துவிட்டு வந்தவர்கள், அங்கிருந்த கடைப் பெண் ஒருவரிடம் நட்பாகியிருக்கிறார்கள். புகைப்படமும் எடுத்திருக்கிறார்கள். அந்தப் படங்களை அந்தப் பெண் வாட்ஸப்பில் அனுப்பியிருந்தார். மனைவி என்னிடம் அவற்றைக் காட்டினார். அப்போதுதான் அவருடைய பெயர் செல்வி என்பதைக் கவனித்தேன். அந்த செல்வியின் பெயரை இப்படித்தான் தன் ஃபோனில் சேமித்து வைத்திருக்கிறார். “Selvi Drunken Monkey.”


தம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.


தம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் திறந்திருக்கிறார்கள். ஒரு நாள் மாலையில் அலுவலகம் விட்டு வரும்போதுதான் பார்த்தேன். முழுக்க முழுக்க சீரியல் விளக்கு அலங்காரத்துடன் மேளம், நாதஸ்வரம் என்று திறப்பு விழா இனிதே நடந்துகொண்டிருந்தது. இந்தக் கட்டடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்ற கேள்வி எழ, அதைப் புறந்தள்ளிவிட்டு இந்த வாரம் இங்கு வந்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.

எனக்கு எப்போதும் சனிக்கிழமைகளில் அலுவலகம் விடுமுறைதான். மகளுக்கும் பள்ளி விடுமுறை. மனைவிக்கு எல்லா சனிக்கிழமைகளிலும் வேலை உண்டு. சில நேரங்களில் மட்டும் மகனுக்கும் விடுமுறை இருக்கும். இன்று மனைவி தவிர்த்து எங்கள் அனைவருக்கும் விடுமுறைதான். அதனால், மகன், மகளுடன் தம்பி விலாஸ் ஹோட்டலுக்குப் போகலாம் என்று கிளம்பிவிட்டேன்.

சரியான அமைவிடம் எங்கென்றால், அண்ணா சாலையிலிருந்து வரும்போது கத்திப்பாரா பாலத்திற்கு சற்று முன் இடப்புறம் இருக்கிறது. வாசலில் நான்கைந்து செக்யூரிட்டிகள். ஒருவர் கார் பார்க்கிங் பகுதியை கவனித்துக்கொண்டிருக்க, இரு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் பகுதிக்கு என்னை அனுப்பினார்கள். அங்கே ஒரே ஒரு வரிசையில் வண்டிகள் நின்றிருக்க, என் வண்டியை நிறுத்துவதற்கு ஓர் இடைவெளி இருக்கிறதா என்று பார்த்தேன். அங்கிருந்த செக்யூரிட்டி ஒருவர், “பரவாயில்லை சார். இங்கேயே விடுங்க. side lock மட்டும் போடாதீங்க” என்றார். சரியென்று வண்டியை நிறுத்தினேன்.

உள்ளே பெரிய இடம். ஓரளவு கூட்டமும் இருந்தது. இருக்கைகள் அதிக இருந்ததால் இடமும் கிடைத்தது. அங்கு வேலை செய்யும் அனைவரும் கறுப்பு நிற உடை அணிந்திருந்தார்கள். ஒருவர் வந்தார். ஆள் நம்மூர்ப் பக்கம் என்று தெளிவாகத் தெரிந்தது. “என்ன சாப்பிடுறீங்க?” என்றார். “மெனு கார்டு கொடுங்களேன்” என்றேன். மகனும் மகளும் பிரியாணியே போதும் என்றனர். மூன்று சிக்கன் பிரியாணியும், ஒரு நெத்திலி வறுவலும் கேட்டேன்.

சுமார் பதினைந்து நிமிடம் கழித்து நெத்திலி வறுவல் வந்தது. சுமாரான சுவைதான். பாதிக்கும் மேல் தண்ணீரில் மூழ்கடித்து எடுத்ததுபோல் இருந்தது. தெரியாமல் தண்ணீர் சிந்தியிருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். நெத்திலி காலியானது. அதன்பிறகு ஐந்து நிமிடம் கழித்துத்தான் பிரியாணி வந்தது. ஒரு பெரிய தட்டு. நடுவில் அச்சடித்த சாதம் போல் வைத்திருந்தார்கள். சீரகச் சம்பா அரிசி. தொட்டுக்கொள்வதற்கு வெங்காயப் பச்சடியுடன், கிட்டத்தட்ட சாம்பார் என்ற அளவில் பருப்பையும், சிவப்பு நிறத்தில் இனிப்பாக ஏதோ ஒன்றையும் கொடுத்தார்கள். பிரியாணியில் சூடு இல்லை. ஒரு வாய் வைத்துப் பார்த்தேன். ஏலக்காய், கிராம்பு என்று எல்லா காரவகைகளின் சுவையை மட்டும்தான் உணர முடிந்தது. சாதமும் குழைந்து, ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு மட்கிய பழைய தக்காளி சாதம்போல் இருந்தது.

இதே சீரகச் சம்பா அரிசியில் செய்யப்பட பிரியாணியை வடபழனி ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறேன். ஒன்றல்ல, இரண்டல்ல. மூன்று, நான்கு என்று உள்ளே தள்ளியிருக்கிறேன். ஆனால், இதை சாப்பிட வேண்டும் என்ற விருப்பமே வரவில்லை.

என்னால் இரண்டு வாய்க்கு மேல் சாப்பிட முடியவில்லை. சிக்கன் அவ்வளவு பழையதாக இருந்ததை சாப்பிடும்போது அதன் வாசனையிலேயே உணர முடிந்தது. அப்படியே வைத்துவிட்டேன். மகனும் மகளும் சாதம் மட்டும் ஓரளவு சாப்பிட்டார்கள். நெத்திலி கொண்டு வந்த தட்டில் சிக்கனை வைத்துவிட்டோம்.

இவ்வளவு பேர் வந்து சாப்பிடுகிறார்களே, மற்றவர்களுக்கு இது தோன்றவில்லையா என்று அடுத்த டேபிளைப் பார்த்தேன். அங்கு மஞ்சள் உடை அணிந்த ஓர் இல்லத்தரசி தன் உடையின் நிறத்தில் இருந்த பிரியாணியை தனது இலையில் வைத்துக்கொண்டிருந்தார். வைக்கும்போது தட்டிலிருந்தும், இலையிளிருந்தும் ஆவி பறப்பது இங்கிருந்தே என்னால் காண முடிந்தது.

அங்கிருந்த ஒரு பையனை அழைத்து, “இந்த டேபிள் அட்டண்டரைக் கூப்பிடு” என்றேன். நம்மூர்க்காரர் வந்தார். “சார், நெத்திலி இப்போ வந்திரும்” என்றார். “நெத்திலி வந்திருச்சுங்க. சாப்பிட்டு முடிச்சிட்டோம்” என்றேன். மேலும், “என்ன சார் இது? பிரியாணி ரொம்ப மட்டமா இருக்கு. சூடே இல்லை, சாதமும் நல்லா இல்லை. சிக்கனும் ரொம்பப் பழசு மாதிரி இருக்கு. நீங்களே பாருங்க, நாங்க எவ்வளவு சாப்பிட்டிருக்கோம்னு” என்று இலையையும் தட்டையும் காட்டினேன். “சரி சார், சரி சார்” என்று தலையாட்டினார்.

எனக்குக் கோபம் தலைக்கேறியது. “சரி சரின்னு தலையாட்டினா என்ன அர்த்தம் சார்?” என்றேன். “இல்லை சார். உள்ளே சொல்றேன்” என்றார். “இதை நீங்க முதல்லயே சொல்லியிருக்கணுமே. கேட்ட பிறகு சொல்றீங்க?” என்றேன். “சொல்றேன் சார். உங்களுக்கு வேற ஏதாவது வேணுமா?” என்றார். “ஒன்னும் வேண்டாம். நீங்க பில்லைக் கொடுங்க” என்று சொல்லிவிட்டுக் கை கழுவச் சென்றோம்.

கை கழுவிவிட்டு வந்தபோது நாங்கள் அமர்ந்திருந்த மேசையைக் காலி செய்துகொண்டிருந்தனர். ஏதோ ஓர் அவசர கதியில் எல்லா வேலைகளும் நடந்துகொண்டிருப்பதாகவே எனக்குத் தோன்றியது. அந்த நம்மூர்க்காரரை அழைத்துக் கடிந்துகொண்டதில் தண்ணீர் குடிக்க மறந்துவிட்டிருந்தேன். வந்து குடிக்கலாம் என்று பார்த்தால், அதற்குள் மேசையை காலி செய்துவிட்டிருந்தனர். என் விதியை எண்ணி நொந்துகொண்டிருக்கும்போது பில் வந்தது. அதிகமில்லை, அறுநூற்று சொச்சம்தான்..

எனக்கு மனம் கேட்கவில்லை. காசாளரிடம் சென்று முறையிடுவதுதான் சரியென்று பட்டது. பில்லை வாங்கிக்கொண்டு நேராகச் சென்று விஷயத்தைச் சொன்னேன். அதற்குள் எங்கிருந்தோ மேலாளர்கள் இருவர் வந்து சமாதானம் பேசத் தொடங்கிவிட்டனர். “நீங்க வேண்ணா வாங்க. உங்களுக்கு நல்ல பிரியாணியா போடச் சொல்றோம்” என்று கெஞ்சினார்கள். உண்மை – கெஞ்சினார்கள். “இல்லைங்க, அப்படியெல்லாம் வேண்டாங்க. சாப்பாடும் சரியில்ல, கவனிப்பும் சரியில்ல. நாங்க யாருமே சரியா சாப்பிடலை” என்றேன். “சார், நாங்க வேண்ணா உங்களுக்கு வேற பிரியாணி அல்லது நீங்க என்ன கேக்கிறீங்களோ அதை பார்சல் பண்ணித் தரோம்” என்று அவர்கள் இறங்கிவிட, இதற்குமேல் நாம் சண்டை பிடிப்பது சரியல்ல என்று என் கார்டைக் கொடுத்தேன்.

ஐந்து நிமிடக் காத்திருப்புக்குப் பின் பார்சல் வந்தது. கேட்டால்தான் கிடைக்கும் என்பது சரிதான் என்றெண்ணிப் புறப்பட்டேன். வெளியே வண்டியை எடுக்க வந்தபோது என் வண்டி முன் வரிசைக்கு மாறியிருந்தது. அதன்பிறகு இரண்டு வரிசைகளில் – மொத்தமாக மூன்று வரிசை வண்டிகள் நின்றிருக்க, என் வண்டிக்குப் பின்னால் இருந்த வண்டியில் side lock செய்யப்பட்டிருந்தது. செக்யூரிட்டி ஒருவரும் இல்லை. எருமை மாடு போன்ற அந்த வண்டியைத் தள்ளினால்தான் என் வண்டியை எடுக்க முடியும் என்ற சூழல். சிறிது நேரம் கழித்து ஒரு செக்யூரிட்டி வந்தார். “ஏங்க, எங்களை side lock பண்ண வேண்டாம்னு சொன்னீங்களே. இவங்க கிட்ட சொல்லலையா?” என்றேன். “என்ன சார் பண்றது? எல்லாரும் கேக்கறதில்லையே” என்றார். நம் கோபத்தை இவரிடம் காட்டி என்ன பயன் என்று வீட்டிற்குப் புறப்பட்டேன்.

அரைகுறை வயிறு. இருக்கும் ஒரு பிரியாணியை மூவரும் சாப்பிட்டுவிடலாம் என்றெண்ணி பார்சலைப் பிரித்தேன். அதே சூடில்லாத, குழைந்த, மட்கிய பழைய சாதம். இந்தப் பார்சல் பிரியாணியாவது நல்ல நிலையில் இருந்திருந்தால் இந்தப் பதிவே வந்திருக்காது. அப்படியே மூடி வைத்துவிட்டேன். யாரேனும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுக்கலாம் என்றாலும் அவர்களது வயிற்றுப்போக்குக்கு நான் காரணமாகிவிட எனக்கு மனம் வரவில்லை.






அறுநூற்று சொச்சம் ரூபாய். என் பணம். நான் உழைத்து சம்பாதித்தது. நான் சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயையும் சம்பாதிப்பதற்கு எவ்வளவு அல்லல் படுகிறேன் என்பதை நான் மட்டுமே அறிந்திருக்கிறேன். உங்களுக்கும் அதேதான். என் பணத்தை எப்படிச் செலவிட வேண்டும் என்பதை நான் அறிவேன். ஆனால், இப்படியெல்லாம் செலவாகவேண்டும் என்று சில நேரங்களில் விதிக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கு இப்படியொரு நிலை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் இந்தப் பதிவு.

முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள்


முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் என்றொரு மலையாளத் திரைப்படம் பார்த்தேன். நாயகன் மோகன்லால் திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற மத்திம வயதைக் கடந்தவர். கீழாட்டூர் கிராம பஞ்சாயத்து செகரட்டரியாக வேலை செய்கிறார். தனது மனைவி மீனாவிடமும், மகள், மகனிடமும் பாசம் காட்டாமல் எப்போதும் எரிந்து விழுகிறவர். இந்நிலையில், தன்னை வசீகரிக்கும், தான் வசீகரிக்கப்பட்டதாகக் கூறும் ஒரு திருமணமான பெண்ணைச் சந்திக்கிறார். அந்தப் பெண் தான் அவர் மீது மிகுந்த காதல் கொண்டிருப்பதாகக் கூற, சபலத்தில் விழுந்துவிடுகிறார். அடுத்த அடி எடுத்து வைப்பதற்குள் ஒரு பிரச்சினை வந்துவிட, பின் மீண்டும் அந்த விஷயத்தை நினைக்காமல் தன் மனைவியை மட்டுமே நேசிக்கும் ஒரு நல்ல கணவனாக மாறிவிடுகிறார். சுபம்!

சுகன்யா


வீட்டில் ஏ.ஸி. அவ்வப்போது நின்றுவிடுகிறது. வோல்ட்டேஜ் பிரச்சினை. ஒழுங்காக ஓடிக்கொண்டிருக்கும் - திடீரென்று நின்றுவிடும். அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று அமைதியாக இருந்துவிட்டு பிறகு தன் பணியை செவ்வனே செய்ய ஆரம்பிக்கும். இத்தனைக்கும் டபுள் பூஸ்டர் ஸ்டெபிலைசர்தான் பயன்படுத்துகிறேன். நான் வசிக்கும் ஏரியா நண்பருடன் சேர்ந்துதான் ஏ.ஸி. வாங்கினேன். “நம்ம ஏரியா கரண்ட் பிரச்சனைக்கு டபுள் பூஸ்டர்தான் செட்டாவும்” என்று கூறியிருந்தார். அவருடைய ஆலோசனையின்படி வாங்கிவிட்டேன். ஐந்தாறு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை பிரச்சினை இருந்ததில்லை.

தொண்டையில் கரகர

சென்னையின் சீஷோஷ்ண நிலை அவ்வளவு சரியில்லை. பகலில் வெயிலுடன் குளிர் காற்றும் சேர்ந்து அடிக்கிறது. இரவில் பனி கொட்டுகிறது. உலர்பனி. ஈரப்பதம் என்பது கொஞ்சம் கூட இல்லை. வண்டியில் பயணிக்கும்போது நேரடியாக நெஞ்சுக்குள் ஊடுருவுகிறது. நம் அனுமதியின்றி மூக்கினுள் நுழைந்து நுரையீரலை சேதப்படுத்துகிறது.